ADD THE SLIDER CODE HERE

Pages

Tuesday, August 16, 2011

தழுவலா? தாக்கமா?

தமிழ் இணையதள பயநீட்டார்களிடையே சமீப காலமாக ஆரோக்யமான விவாதங்கள் எழுவதை காண முடிகிறது. அதில் குறிப்பிடத்தக்க ஒன்று ஆங்கில திரைபடங்களிலிருந்து தமிழுக்கு இறக்குமதியாகும் படங்கள் பற்றிய வாக்குவாதங்கள். கடந்த சில வருடங்களாக தமிழில் வெளியாகி நன்றாக ஓடிய படங்கள் ஹாலிவுட் படங்களின் கதைகளை கொண்டிருப்பதே இதற்கு காரணம்.

சமீபத்தில் வெளியான தெய்வ திருமகள் படம் மிக பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும், சிலரிடையே கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இயக்குனர் விஜய் இயக்கி விக்ரம் நடித்த இந்த படம் ஆங்கில திரைப்படமான "I am Sam" ன் தழுவல் என்பதே காரணம். இதே போல் மிஷ்கின் இயக்கி நடித்த நந்தலாலா ஜப்பானிய திரைப்படமான கிஜிகிரோ படத்தின் தழுவல். ஆனால் இந்த படங்களின் இயக்குனர்களான விஜய் மற்றும் மிஷ்கின் இவை தழுவல் அல்ல. தாக்கம் என்கின்றனர். தாங்கள் ரசித்த, தங்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்திய படங்களை தமிழில் வெளியிடுவதில் என்ன தவறு என்பது இவர்கள் வாதம்.

விமர்சகர்கள் முன்வைக்கும் வாதமோ இதற்கு நேர்மார். "எந்த ஒரு படைப்பும் அதற்கு உரிய மரியாதையை பெற வேண்டும். யாரோ ஒருவர் எழுதிய கதையை சில மாற்றங்களை செய்து தன கதை என்று கூறி வெளியிடும் போக்கு கண்டிக்கதக்கது. இதன் மூலம் அவர்கள் அடையும் புகழ் போலித்தனம்" என்கின்றனர். மேலும் "காப்புரிமை பெறாமல் படம் எடுப்பது சட்டப்படி குற்றம். தெலுங்கில், ஹிந்தியில் வெளியான படங்களின் உரிமையை பெற்று அதை ரீ மேக் ஆகும் இயக்குனர்கள் ஆங்கில படத்தை ரீமேக் செய்யும் போது இதை கடைபிடிப்பது இல்லை. அவர்களுக்கு என்ன தெரியவா போகிறது என்ற எண்ணமே காரணம்" எனவும் வாதிக்கின்றனர்..

அப்படி எந்தெந்த படங்கள் வேற்று மொழி படங்களிலிருந்து தழுவி எடுக்கப்பட்டது என்று கேட்டால் அவர்கள் தரும் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. யோகி, வாமணன், ஜூலி கணபதி, ஜக்குபாய், அந்நியன், கமல் ஹாசனின் ஒரு டஜன் படங்கள்,கஜினி, விண்ணைத்தாண்டி வருவாயா, காக்க காக்க, விருதகிரி, சரோஜா, அயன் etc etc...

சரி இந்த சமாச்சாரத்தை மூன்று வகைகளாக பிரிக்கலாம். 1.கதையை சற்று மாற்றி வெளியிடுவது(தெய்வ திருமகள், நந்தலாலா). 2.கதையின் கருவை மட்டும் எடுத்து கொண்டு தமிழுக்கு ஏற்றார் போல் மாற்றுவது(கஜினி, விண்ணைத்தாண்டி வருவாயா). 3.ஒரு சில காட்சிகளை மட்டும் எடுத்து கதையில் சேர்ப்பது(வேட்டைக்காரன், குருவி). பச்சை கிளி முத்துச்சரம் படம் Derailed என்ற படத்தின் முழு காப்பி என்று சிலர் கூறினாலும் அது Derailed என்ற நாவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட கதை என்று கெளதம் படத்தின் End title ல் கூறி இருப்பார். மேலும் வெற்றிமாறனின் ஆடுகளம் திரைப்படம் ரூட்ஸ் நாவலின் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கபட்டது. இந்த காப்புரிமை பிரச்சனையை சேரன் மற்றும் மிஷ்கின் ஒரு பேட்டியில் தீவிரமாக எதிர்த்தார்கள். அப்போது மிஷ்கின் கூறியது "நந்தலாலா ஜப்பானிய திரைபடத்தின்(கிகுஜிரோ) தாக்கம் என்று கூறுவதில் நன் வெட்கப்படவே இல்லை. ஏனெனில் அந்த படத்தின் இயக்குனரை நான் குருவாக மதிக்கிறேன். இந்த படத்தில் கிகுஜிரோ படத்தின் பல காட்சிகளை வைத்துள்ளேன். அந்த காட்சிகளை நான் அவருக்கு சமர்ப்பணம் செய்கிறேன்" என்றார்.

எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான். இதை ஏன் படம் வெளி வருவதற்கு முன்பு யாரும் கூறுவது இல்லை. நான் மிஷ்கினின் தீவிரமான ரசிகன் என்பதால் நந்தலாலா வெளிவரும் முன் அந்த படம் தொடர்பாக அவர் கொடுத்த பல பேட்டிகளை பார்த்திருக்கிறேன். எதிலேயும் கிகுஜிரோ பற்றி அவர் வாய் திறந்ததே கிடையாது. அதே போல் வெற்றிமாறன் ஆடுகளம் படக்கதை பற்றி முதலில் பேசவே இல்லை . பின்னர் ஒரு பேட்டியில், அதை பற்றி பேட்டி எடுப்பவர் (Roots நாவலை பற்றி அறிந்தவர்) கேட்ட பொது அது அந்த நாவலின் தாக்கம்தான் என்று ஒப்புக்கொண்டார். 2008 ம் ஆண்டு ஒரு உதவி இயக்குனர் தசவதாரம் கதை என்னுடையது என்று வழக்கு தொடுத்தாரே. அதற்கு சம்மந்தப்பட்ட சிறு குறிப்பு இங்கு உள்ளது. இந்த குறிப்பில் இருப்பவர் தான் அந்த துணை இயக்குனரா என்று எனக்கு தெரியாது.

காப்பி வித் அனு நிகழ்ச்சியில் சூர்யா முருகதாஸ்சை அருகில் வைத்து கொண்டு "கஜினியில் வந்த Short Term Memory Loss கான்செப்ட்டை இவர் எப்படி பிடித்தார் என்று எல்லோரம் வியக்கிறோம்" என புகழ்வார். அதை கேட்டு முருகதாஸ் தன்னடக்கத்தோடு சிரித்து கொண்டு இருப்பார் அது Memento படத்தின் கதையில் எடுக்கப்பட்டது என்று கூறாமல். இயக்குனர் விஜய் ரீமேக் செய்த கிரீடம்(From malayalam movie Kireedam), பொய் சொல்ல போறோம்(From Hindi movie Khosla Ka Ghosla) படங்கள் அதை முதலில் எடுத்த தயாரிப்பளர்களிடம் காப்புரிமை பெற்று பெறகு தமிழில் எடுக்கபட்டது. ஆனால் தெய்வ திருமகள் எடுக்கும் பொது அதை அவர் ஏன் செய்யவில்லை?.

இயக்குனர்கள் முதலில் இதை மறைத்து விட்டு பிறகு ஒப்புகொள்வது ஏன்? அவர்களை உண்மையிலேயே அந்த படங்கள் பாதித்திருந்தால் படத்தின் டைட்டிலோடு "Inspired from ... " என்று போடலாமே. Credits கொடுப்பதால் மட்டும் காப்புரிமை பெறாமல் படம் எடுப்பது சரி என்று நான் கூறவில்லை. இது போல் விமர்சனங்களிலிருந்து விடுபடவாவது அதை செய்யலாம். இவர்கள் செய்வது திருட்டு என்று என்னால் கூற முடியவில்லை. ஏனெனில் ஒரு காட்சியை இயக்க அவர்கள் எவ்வளவு தூரம் போராடுவார்கள் என்பதை நாம் அறிவோம். இப்படி கடினமாக உழைத்து ஒரு படத்தை எடுத்து விட்டு பிறகு கெட்ட பெயர் வாங்கத்தான் வேண்டுமா.

"யோவ், மனுஷனுக்கு ஆயிரம் பிரச்னை இருக்கு. இத இவ்ளோ தூரம் சீரியஸ்சா எடுதுகனுமா" என்றால் ஆம் எடுத்து கொண்டு தான் ஆகவேண்டும். சினிமா ஒரு கலை. அது படைப்பக துறை என்பதால் திறமை இருப்பவர்கள் மட்டுமே அங்கு இருக்க வேண்டும். இவர்கள் செய்யும் தவறு துணை இயக்குனர்களை பாதிக்கும் வாய்ப்பு அதிகம். சுயமாக கதை எழுதுபவர்கள் கூட ஆங்கில படத்தில் இருந்து கதை பிடிக்கலாம் என சிந்திப்பார்கள். இன்று பலர் வியந்து பாராட்டும் ஆரண்ய காண்டம் படம் கூட ஒரு ஸ்பானிஷ் படத்தின் தழுவல் என்று இந்த பதிவில் படித்தேன். இப்படி அடுத்த தலைமுறை இயக்குனர்களை பாதிக்கும் இந்த போக்கை எதிர்க்க வேண்டும்.

இணையத்தில் இந்த தழுவல் கலாச்சாரத்தை தீவிரமாக சிலர் எதிர்த்து வருகின்றனர். தீவிரமாக என்றால் தெய்வ திருமகள் தழுவல் பற்றி I am Sam தயாரிப்பாளருக்கு மின் அஞ்சல் அனுப்பும் அளவிற்கு. கருந்தேள்(www.karundhel.com) என்ற பெயரில் எழுதி வரும் திரு.ராஜேஷ் மற்றும் கணேஷ் இந்த நல்ல காரியத்தை செய்தவர்கள். இது போன்ற எதிர்ப்புகள் வலு பெற்றால் மட்டுமே சொந்த சரக்கை நம்பி தமிழ் திரையுலகம் மீண்டும் திரும்பும்.

6 comments:

  1. பாத்து உடனே விழுந்து பிராண்ட வருவார்கள் ஒரு கூட்டமே இப்படி திரியுது தமிழ் சினிமாவை விமர்சனம் பண்ணாலே அடின்கொய்யால ன்னு வருகிறார்கள்!!ஆனால் இந்த அம்பலபடுத்துதலை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும்!

    ReplyDelete
  2. கரெக்ட் பாஸ்.. ஆனா பத்திரிக்கைகளும் இதை செய்ய வேண்டும்.. அந்த வகையில் 'மீடியா வாய்ஸ்' இந்த வார இதழில் இதை பற்றி எழுதி இருந்தது பாரட்டதக்க விஷயம்..

    ReplyDelete
  3. டிசண்ட்டா குட்டி இருக்கிங்க.. தவறு செய்பவர்களையும்.. அதற்கு வரிந்து கட்டி கொண்டு வருபவர்களையும்!!

    ReplyDelete
  4. Julie Ganapathy 'may' be inspired(?) / copied from
    Stephen King's novel Misery, not from the movie Misery.

    ReplyDelete
  5. நல்ல அலசல்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை…

    Follower ஆகி விட்டேன்… இனி தொடர்வேன்…

    தொடர வாழ்த்துக்கள்...

    நேரம் கிடைச்சா என் தளம் வாங்க... நன்றி…

    ReplyDelete